Blog Details
(Weekly article by Mythili Chandrasekaran - Sketch courtesy Mrs. Nithya Balaji )
எங்கே போகிறோம்?
அது நான் சிறுமியாய் இருந்த நாட்கள்.
1960களில் தற்போதைய சென்னை எனப்படும் மதராஸ், கான்க்ரீட் ஜங்கிள் எனப் பெயர் பெறாத காலம். புது மாம்பலம் ( தியாகராய நகர் ) பகுதியில், பெரும்பாலான வீடுகள் இரண்டு அல்லது மூன்று கிரௌண்டில், நான்கு புறமும் மரம் செடி கொடிகளுக்கு நடுவில், விஸ்தாரமாக அமைந்திருந்த நேரம்.
'வைகறைத் துயிலெழு'. இதை உறுதிப் படுத்தவே அவதாரம் செயதாற்போல் என் அம்மா. பொழுது விடியும் முன்பே எழுந்து, பல் துலக்கி, பசும் சாணம் கலந்த நீரில் வாசல் தெளித்து, அரிசி மாவில் பெரிது பெரிதாய் விதவிதமாக முத்தான கோலங்கள் போட்டு, வாசலில் மாட விளக்கு ஏற்றி வைத்தால், வீடே களை கட்டும். அஷ்ட லக்ஷ்மிகளும், நீ நான் என்று போட்டி போட்டுக்கொண்டு வீட்டில் நுழையும் வண்ணம், அழகு சிந்தும்.
மார்கழி மாதங்களில் ஒரு பூசணிப் பூவும் கோலத்தின் நடுவில், சாணத்தில் மலரும்.
லேசான பனி மூடிய வேளையில் எங்கோ ஓரிரண்டு காகங்களும், குயில்களும், அரைகுறைத் தூக்கம் விழித்து விடியலை வரவேற்கும். காற்றில் தவழ்ந்து வரும் வேங்கடேஸ்வர சுப்ரபாதம் ஒரு தெய்வீக உலகத்தை உருவாக்கும்.
எனக்கு ஐந்து அல்லது ஆறு வயது. காலையில் அம்மா கோலம் போடும்போது படிக்கட்டில் அமர்ந்து, கண்கொட்டாமல் அம்மாவைப் பார்க்க மிகவும் பிடிக்கும்.
நானும் கோலம் போடுவேனென்று அரிசி மாவை எடுத்துப் புள்ளி வைத்துக் கிறுக்கலாகக் கோலம் போட, அம்மா சிரித்துக் கொண்டே அருகில் இழுத்து அணைத்து முத்தமிட, அம்மாவின் வாசனையை முகர்ந்து அனுபவிப்பேன்.
பிறகு வயது ஏற ஏற, நானும் அக்காவும் போட்டி போட்டுக்கொண்டு வாசலில் வண்ணமயமாகக் கோலங்களை நிரப்ப, நாங்கள் குனிந்து கோலம் போடும் அழகை அம்மா ரசிக்க, அருகில் பவள மல்லியும், பாரிஜாதமும் மலர்களைக் கொட்டி மணம் பரப்பிச் சிரிக்கும்.
இப்பொழுது ஐம்பது வருடங்களுக்குப் பிறகு, காலையில் எழுந்திருக்கும்போதே லேசாக முதுகு பிடித்துக் கொள்ள, சற்றே குனிந்து நிமிர்ந்து உடம்பைத் தளர்த்திக் கொண்டு, பல் துலக்கி, அடுக்கு மாடிக் குடியிருப்பில் , வாசலில் உள்ளங்கை நீர் தெளித்துக் கோலம் என்ற பெயரில் இரண்டு இழை இழுக்கும்போது, அந்தப் கால நினைவுகள் கண்ணில் நீர் கோர்க்கின்றன.
விடியலில் எழுந்து ஓசோன் நிரம்பிய காற்றை சுவாசித்தபடி, ஈ எறும்புகளுக்கும், காக்கை குயில்களுக்கும் உணவாக, அரிசி மாவில், குனிந்து நிமிர்ந்து அழகாகப் போட்ட கோலங்கள் மனக்கண்ணில் விரிகின்றன.
எதைத் தேடி நாம் ஓடிக் கொண்டிருக்கிறோம்?